வேண்டுகோள்....

வேண்டுகோள்

 மல்லிபட்டினத்தில் மைய்யத்குழி தோண்டும் வேலை செய்துவரும் சகோதரர் ஷேக் தாவூத் (நோம்பு பக்கீர்சா அவர்களின் மருமகன் )  மகள் திருமணத்திற்காக உங்களுடைய உதவிகளை வாரி வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம் . உங்கள் உதவிகளை அனுப்ப வேண்டிய முகவரி hushan biviindian overseas banksb/ac no.083301000011318mallipattinam branch...

Tuesday 25 September 2012

சகோ. தமீம் அன்சாரி கைது - உண்மை அறியும் குழுவின் அறிக்கை

தஞ்சை முஸ்லிம் இளைஞர் இராணுவ இரகசியங்கள் கடத்தியதாகக் கைது உண்மை அறியும் குழு அறிக்கை

 செப்டம்பர் 24, 2012, திருச்சி

 சென்ற 18ந்தேதி முதல் தமிழக ஊடகங்களில் தஞ்சையைச் சேர்ந்த தமிம் அன்சாரி என்னும் இளைஞன் இலங்கை வழியாக இராணுவ இரகசியங்களைப் பாகிஸ்தானுக்குக் கடத்தியதாக ஒரு செய்தி மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது. திருச்சி ‘கியூ’ பிரிவு போலீசார் அவரைக் கைது செய்து வழக்குப் பதிவு செய்துள்ளனர் (மு.த.அ எண் 1/2012. குற்றப் பிரிவுகள்; The Official Secret Act 3, 4 & 9 மற்றும் IPC 120(B)). இவருடன் சக குற்றவாளிகளாக இலங்கை கொழும்பு நகரைச் சேர்ந்த ஷாஜி மற்றும் லங்கா ஷாஜி ஆகியோரும் இலங்கையிலுள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரி அமீர் சுபைர் சித்திக் என்பவரும் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்கள் பாகிஸ்தான் நாட்டு உளவுப் பிரிவான ஐ.எஸ்.ஐயின் தென் ஆசியப் பகுதியின் முக்கிய முகவர்கள் என்பதாகவும் கியூ பிரிவு போலீசார் ஊடகங்களுக்குச் செய்திகள் தந்துள்ளனர்.

“மத விரோதம் காரணமாகவும் சொந்த லாபத்திற்காகவும்” தமிம் அன்சாரி இதைச் செய்துள்ளார் எனவும், (1) இந்தியாவை இஸ்லாமிய நாடாக்கும் நோக்கத்துடனும், (2) வட இந்தியாவைப் போல தென்னிந்தியாவிலும் பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்தி இந்திய அரசை அச்சுறுத்தும் நோக்கத்துடனும் இச்சதி வேலை தொடங்கப்பட்டுள்ளதாகவும் கியூ பிரிவு போலீசார் கொடுத்துள்ள செய்தி காட்சி மற்றும் அச்சு ஊடகங்களில் பெரிய அளவு முக்கியத்துவத்துடன் தொடர்ந்து வெளிவருகிறது.

குற்றச்சாட்டுகள் கடுமையானவை; கவலைக்குரியவை. தமிழகத்தில் பயங்கரவாதத் தாக்குதல்களுக்குக் காரணமாகிற சதி என்கிற வகையில் உடனடி நடவடிக்கையைக் கோருபவை என்பதில் யாருக்கும் ஐயம் இருக்க முடியாது. ஆனால் அதே நேரத்தில் கைது செய்யப்பட்டுள்ள தமீம் அன்சாரி குறித்து வேறு வகையான தகவல்களும் கிடைத்தன. அவர் மார்க்சிஸ்ட் கட்சியிலும் அது சார்ந்த வெகுமக்கள் அமைப்புகளிலும் பல ஆண்டுகளாகச் செயல்பட்டு வந்தவர் எனவும், வெங்காயம் மற்றும் உருளைக் கிழங்கு ஏற்றுமதி செய்வது என்கிற அளவிலேயே அவருக்கு இலங்கையுடன் தொடர்பிருந்தது எனவும், அவரும் அவரது குடும்பத்தாரும் கியூ பிரிவு போலீசின் குற்றச்சாட்டை மறுக்கின்றனர் எனவும் அறிந்தோம்.

 எனவே இவ்வழக்கு தொடரப்பட்டுள்ளது குறித்த உண்மைகளை அறிய கீழ்க்கண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டது.

 1. பேரா.அ. மார்க்ஸ், மனித உரிமைகளுக்கான மக்கள் கழகம் (PUHR), சென்னை, 2.
2.கோ. சுகுமாரன், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு (FPR), புதுச்சேரி, 3.
3. எஸ்.வி. ராஜதுரை, மூத்த மனித உரிமைப் போராளி, நீலகிரி, 4.
4.பேரா. பிரபா. கல்விமணி, பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்கம், திண்டிவனம், 5. பேரா. சே.கோச்சடை, மக்கள் சிவில் உரிமைக் கழகம் (PUCL), காரைக்குடி, 6. 6.வழக்குரைஞர் அ.கமருதீன், திருச்சி.

 இக்குழு உறுப்பினர்கள் சென்ற 21, 22, 23 தேதிகளில் திருச்சி, தஞ்சை முதலான இடங்களுக்கு நேரில் சென்று சிறையிலிருந்த தமிம் அன்சாரியைச் சந்தித்து அவரது வாக்குமூலத்தைப் பெற்றுக் கொண்டனர்.. அவரது வழக்குரைஞர் ஜே. கென்னடி என்கிற ஸ்டீபன் செல்வராஜ் மற்றும் அன்சாரியின் மனைவி நபீலா (23), தாயார் முத்து நாச்சியார் (50), மாமா லியாகத் அலி மற்றும் அவருடன் தொடர்பிலிருந்த மார்க்சிஸ்ட் கட்சி மற்றும் அதன் வெகு மக்கள் அமைப்பின் முக்கிய பொறுப்பாளர்கள் ஆகியோரைச் சந்தித்தனர். திருச்சி விமான நிலைய மேலாளரிடம் நேரிலும், இம்மிக்ரேஷன் அதிகாரி சிரீதரனிடம் தொலைபேசியிலும் பேசினர்.. அவர்கள் தமக்கு ஏதும் தெரியாது எனக் கூறி முடித்துக் கொண்டனர். கியூ பிரிவு போலீசாருடன் மும்முறை தொடர்பு கொண்டோம். இறுதியாகப் பேசிய ஆய்வாளர் ஒருவர் எதுவானாலும் சென்னை அலுவலகத்தில் விசாரித்துக் கொள்ளுங்கள் எனச் சொல்லித் தொடர்பைத் துண்டித்து விட்டார்..

 நாங்கள் அறிந்த உண்மைகள்

 அதிராம்பட்டினத்தைச் சேர்ந்த தமீம் அன்சாரி (35) தமிழில் முதுகலைப்பட்டம் பயின்றவர். அவரது தந்தை அப்துல் ரஹ்மான் மற்றும் மூன்று சகோதரர்கள் வெளிநாடுகளில் உள்ளனர். அன்சாரிக்கு மனைவியும் ஒரு ஆண் குழந்தையும் உண்டு. மாணவப் பருவம் தொட்டு மார்க்சிஸ்ட் கட்சியின் வெகு மக்கள் அமைப்புகளில் முக்கிய பொறுப்புகளில் இருந்துள்ளார். இந்திய மாணவர் சங்கத்தின் தஞ்சை மாவட்டச் செயலாளராகவும் மாநிலத் துணைச் செயலாளராகவும் பதவி வகித்துள்ளார். முற்போக்கு ஏழுத்தாளர் சங்கத்திலும் செயல்பட்டுள்ளார். அறிவியல் மன்றத்திலும் (Science Forum) மாவட்டச் செயலாளராக இருமுறை இருந்துள்ளார். இவ் அமைப்பின் செயலாளர் பொறுப்பு கட்சி உறுப்பினர்களுக்கே கொடுக்கப்படும் என்பதால் இவர் மார்க்சிஸ்ட் கட்சி உறுப்பினராக இருந்தார் எனவும் யூகிக்கலாம். அன்சாரி எந்த நாளிலும் முஸ்லிம் அமைப்புகளில் இருந்ததில்லை. அவரது தொடர்புகள் யாவும் இடதுசாரி அமைப்புகளுடனேயே இருந்துள்ளன. இதற்கு முன் அவர் எந்த வழக்கிலுமோ, குற்றச்சாட்டுகளிலுமோ தொடர்புபடுத்தப்பட்டதுமில்லை. தங்கள் கட்சியில் உறுப்பினராக இருந்தவர் என்பதை மார்க்சிஸ்ட் கட்சியினர் இன்று சொல்லத் தயங்கியபோதும், அவர் கட்சியில் இருந்த காலத்தில் அவர்மீது இப்படியான தொடர்புகளுக்காகக் கட்சி நடவடிக்கை ஏதும் எடுக்ககப்பட்டதுமில்லை.

 தஞ்சையிலிருந்து கொண்டு மருந்து ஏற்றுமதி முதலான பல தொழில்களை முயற்சி செய்து பெரிய வெற்றி அடையாத அவர், இறுதியில் இலங்கைத் தலைநகரம் கொழும்பில் உள்ள ஹாஜி என்கிற சித்திக் அலிக்கு வெங்காயம், உருளைக்கிழங்கு முதலியவற்றை ஏற்றுமதி செய்துள்ளார். நீலகிரி முதலான இடங்களுக்குச் சென்று இவற்றைக் கொள்முதல் செய்து கப்பலில் அனுப்பியுள்ளார். இது தொடர்பாக அன்சாரி இதுவரை நான்கு முறை இலங்கை சென்று வந்துள்ளார். கிழக்குக் கடற்கரையோர முஸ்லிம்கள் இலங்கையுடன் பாரம்பரியமாகக் கடல் வணிகம் செய்து வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 இந்த வணிக உறவில் ஹாஜிக்கும் அன்சாரிக்கும் இடையே ஒரு சிக்கல் உருவாகியுள்ளது. அன்சாரி அனுப்பிய ஒரு லோட் வெங்காயம் அழுகி விட்டதெனக் கூறி அதன் விலையான 10 லட்சம் ரூபாயை ஹாஜி தர மறுத்துள்ளார். இதைப் பெறுவதற்காக ஐந்தாம் முறையாக அன்சாரி கடந்த 16ம் தேதி காலை 7.30 மணி அளவில் திருச்சியிலிருந்து இலங்கைப் புறப்படும் விமானத்தில் டிக்கட் பதிவு செய்துள்ளார்.

 16 காலை 5 மணிக்கு தஞ்சையிலுள்ள தன் வீட்டிலிருந்து புறப்பட்ட அவர் 5.30 வரை மனைவியிடம் செல் போனில் பேசியுள்ளார். அதற்குப் பின் 11 மணிவரை அவரை செல்போனில் தொடர்பு கொள்ள இயலவில்லை. திட்டமிட்டபடி அவர் பயணம் செய்திருந்தால் 10 மணி வாக்கில் அவர் கொழும்பு சென்றிருப்பார். கொழும்பு சிம் எண்ணுக்குத் தொடர்பு கொண்டபோது அதுவும் இயங்கவில்லை. 11 மணி வாக்கில் இங்குள்ள சிம் எண்ணில் தணிந்த குரலில் அன்சாரி மனைவியுடன் பேசியுள்ளார். தான் சில காரணங்களால் இலங்கை செல்லவில்லை எனவும், ரவி என ஒருவர் வருவார் அவரிடம் தனது லேப்டாப், மெமரி கார்ட் ரீடர்கள் முதலியவற்றைக் கொடுத்தனுப்புமாறும் கூறி போனைத் துண்டித்துள்ளார்.

சற்று நேரத்தில் ரவி எனச் சொல்லிக் கொண்டு ஒருவர் வந்து லேப்டாப்பைக் கேட்டுள்ளார். சந்தேகம் கொண்ட மனைவி அன்சாரியைத் தொடர்புக் கொண்டபோது வந்துள்ள நபரிடம் லேப்டாப் முதலியவற்றைக் கொடுக்கச் சொல்லி போனைத் துண்டித்துள்ளார்.

அடுத்த நாள் காலை வரை அன்சாரியுடன் தொடர்பு கொள்ள இயலவில்லை. காலை 10 மணி அளவில் அன்சாரியிடமிருந்து போன் வந்துள்ளது. தான் கோவை செல்வதாகவும். தனது போனில் சார்ஜ் குறைந்து வருவதால் இனி பேச இயலாது எனவும் கூறித் தொடர்பைத் துண்டித்துள்ளார். அன்று (17) மாலை தொலைக்காட்சிகளில் காட்டப்பட்ட செய்திகளிலிருந்தே குடும்பத்தினர் அன்சாரி கைது செய்யப்பட்டுள்ளதை அறிந்து அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

 நடந்தது இதுதான். காலை 7.30 மணி அளவில் திருச்சி விமான நிலைய இம்மிக்ரேஷன் போலீசின் ஒத்துழைப்புடன் கியூ பிரிவு போலீசார் அன்சாரியைக் கைது செய்து கொண்டு சென்றுள்ளனர். போர்டிங் பாஸ் எல்லாம் வங்கியபின் இந்தக் கைது நடந்துள்ளது. அவரை என்கவுன்டர் செய்வது என்கிற அளவில் மிரட்டி செல்போனில் பேச வைத்து லேப்டாப் முதலியவற்றைப் பெற்றுள்ளனர். 17 மாலை திருச்சி நீதிமன்றத்தில் அன்சாரியை ஆஜர்படுத்தியுள்ளனர்.

 கியூ பிரிவின் முதல் தகவல் அறிக்கையில் காணப்படும் முரண்கள்

 1. பதினாறு காலை 7.30 மணி அளவில் திருச்சி விமான நிலையத்தில் வைத்துக் கைது செய்யப்பட்ட அவரை, அன்று இரவு 8 மணி அளவில் திருச்சி டோல்கேட் டி.வி.எஸ் அருகில் தஞ்சை செல்லும் பேருந்து நிறுத்தத்திற்குப் பக்கத்திலுள்ள டாஸ்மாக் கடை அருகில் கைது செய்ததாகச் சொல்கிறது முதல் தகவல் அறிக்கை. ஓடிப் பிடித்து அவரைக் கைது செய்தனராம். அந்தப் பக்கத்திலுள்ள கடைகள் அனைத்தையும் எங்கள் குழு விசாரித்தது, அப்படியான ஒரு சம்பவம் அன்று நடக்கவே இல்லை என்பதை எல்லோரும் உறுதிப்படுத்தினர், ஆக ஒரு பகற் பொழுது முழுவதும் சட்ட விரோதக் காவலில் வைத்திருந்தது என்பது தவிர, முதல் தகவல் அறிக்கையில் ஏன் இந்தப் பொய்?

 2. அன்சாரி மூலமாக பாகிஸ்தான் உளவுத் துறை பெற விரும்பியதாகச் சொல்லப்படும் தகவல்கள் யாவும் மிக எளிதில் கூகுள் முதலான இணையத் தளங்களில் கிடைப்பவை. எடுத்துக்காட்டாக வெலிங்டன் பாரக்சை பாகிஸ்தான் தூதர் சுபைர் கொடுத்த ப்ளாக்பெர்ரி செல்போனின் மூலம் காருக்குள் அமர்ந்தவாறு அன்சாரி படம் எடுத்து அனுப்பினாராம். வெலிங்டன் பாரக்ஸ் படம் கூகுளில் மிகத் தெளிவாகக் கிடைக்கிறது. செல்போனில் எடுக்கப்படும் படத்தைக் காட்டிலும் அது கூடுதல் விவரங்களைக் கொண்டது. தவிரவும் வெலிங்டன் பாரக்ஸ் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்டது. அதனுடைய வடிவமைப்பு உலகறிந்த இரகசியம். செல்போனில் வெளியிலிருந்து படமெடுத்து இலங்கை வழியாகக் கடத்தப்பட வேண்டிய அளவுக்கு அது யாருமறியா ஒன்றல்ல. இன்னொன்றும் சிந்தனைக்குரியது. இலங்கை இராணுவத்திற்கு இந்திய அரசு வெலிங்டன் பாரக்சிலும் மற்ற இராணுவத் தளங்களிலும் பயிற்சி அளிக்கிறது. அவர்களுக்குக் கிடைக்காத என்ன இரகசியத்தை இந்தச் செல்போன் படங்கள் தந்துவிட இயலும்? இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையேயான இராணுவ உறவுகளை அறிவோம். Most Favoured Nation என்கிற நிலையில் அவை செயல்படுகின்றன என்பதையும் நாம் மனதில் கொள்ள வேண்டும்.

 3. தவிரவும் தான் பதிவு செய்த ‘இரகசியங்களை சி.டி யில் பதிவு செய்து நேரடியாகக் கொண்டு கொடுக்க அன்சாரி இலங்கை சென்றார் என்பதும் நம்பும்படியாக இல்லை. முன்னதாகப் பலமுறை விமானப் பயணம் செய்துள்ள அன்சாரி, 16ந்தேதி அன்று விமான நிலையத்தில் கைப்பை பரிசோதனை செய்யப்படுவதைக் கண்டு அதிர்ர்ச்சியடைந்து பயணத்தை ரத்து செய்து திரும்பினார் என்பதும் ஏற்றுக்கொள்ளுமாறு இல்லை.

 4. தஞ்சைக்கருகில் உள்ள வல்லத்தைச் சேர்ந்த ராதா என்கிற ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரியிடம் அன்சாரி நெருங்கிப் பழகி இராணுவ இரகசியங்கள் பலவற்றைப் பெற்றார் எனச் சொல்லப்படுகிறது. ஏன் அந்த ராதாவை இதுவரை விசாரிக்கவில்லை? ஓய்வு பெற்ற இராணுவ வீரர்களிடமெல்லாம் இராணுவ இரகசியங்கள் இருக்கும் என்பதும் நம்பத் தகுந்ததாக இல்லை.

 5. தூதரக அதிகாரிகளுக்கே உரித்தான சிறப்பு உரிமைகளை உடையவர்களை எல்லாம் (Diplomatic immunity) வழக்கில் சேர்த்திருப்பதென்பது வழக்கை நீண்ட நாட்களுக்கு இழுத்தடிக்கும் நோக்குடன்,, செயப்பட்டதாகவே உள்ளது.

 6. 21 மாலை அன்சாரியைப் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளித்தபோது அவர் எங்கு வைத்து விசாரிக்கப்படுகிறார் என்பது அவரது வழக்குரைஞர்களுக்குத் தெரிவிக்கப்பட வேண்டும் எனவும், தேவையானால் அவர் தன் வழக்குரைஞர்களைக் கலந்தாலோசிக்கலாம் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் அன்சாரி போலீஸ் கஸ்டடியில் எடுக்கப்பட்டது தொடங்கி மீண்டும் நீதிமன்றக் காவலுக்குக் கொண்டு வரப்படும் வரை கியூ பிரிவு போலீசார் வழக்கறிஞருக்குத் தகவல் தெரிவிக்கவில்லை. 16ந்தேதி அன்று அன்சாரியின் மனைவியிடமிருந்து சட்ட விரோதமாகக் கைப்பற்றப்பட்ட லேப்டாப் முதலியவற்றை இந்த விசாரணையின்போது கைப்பற்றியதாகாக் காட்டுவதற்காகவே இப்படிச் செய்திருக்க வேண்டும். 

‘கியூ’ பிரிவு போலீஸ் 

 கியூ பிரிவு போலீஸ் என்பது 1970ல் வால்டர் தேவாரம் அதிகாரியாக இருந்தபோது நக்சலைட் கட்சியினர் குறித்த உளவுகளை அறிய உருவாக்கப்பட்ட ஒரு உளவு அமைப்பு. வெறும் உளவு அமைப்பாக இருந்த கியூ பிரிவிற்கு 1993ல் போலீஸ் அதிகாரம் கொடுக்கப்பட்டது. எனினும் அதில் பணியாற்றுபவர்களுக்குச் சீருடை கிடையாது. காவல் நிலையத்தில் பெயர்ப் பலைகைகள் கூட இருப்பதில்லை.

 உளவுத் துறையும் காவல்துறையும் அவற்றின் நோக்கம், செயல்படும் விதம் உள்ளிட்ட எல்லா அம்சங்களிலும் வேறுபட்டவை. உளவுத் துறை என்பது ஒரு இரகசிய அமைப்பு. ஒரு வகையில் சட்ட நெறிகளுக்கு அப்பாற்பட்ட அமைப்பும்கூட (clandestine organization). இது சேகரிக்கிற உளவுத் தகவல்களுக்கு (intelligence) சாட்சிய மதிப்பு (evidential value) கிடையாது. அதாவது சேகரிக்கப்பட்ட உளவுகளை அப்படியே சாட்சியமாக ஏற்க முடியாது. அமெரிக்க கூட்டரசுப் புலனாய்வு மையத்தின் (FBI) தலைவராக 48 ஆண்டுகள் பணி செய்த ஜே. எட்கார் ஹூவர் ஒருமுறை ஒரு இரகசியக் குறிப்பில் எழுதியது போல உளவுத் துறை என்பது அரசுக்கு எதிரான செயற்பாடுகளையும் அமைப்புகளையும் சிதைத்து அழிக்கும் ஒரு நிறுவனம். இந்த அழிவுச் செயலை நியாயப்படுத்துவதற்காக அது முன்வைக்கும் “குற்றச்சாட்டுகளுக்குப் பின்னால் ஆதாரபூர்வமான உண்மைகள் உள்ளனவா இல்லையா என்பது முக்கியமில்லை”. சட்டபூர்வமற்ற படைகளை உருவாக்குவது, போட்டி ஆயுத இயக்கங்களை உருவாக்கி அவைகட்கு ஆயுதங்களையும் பயிற்சிகளையும் அளிப்பது முதலான செயல்களை இந்திய உளவு நிறுவனங்கள் செய்து வருவதை நாமறிவோம்.

 காவல்துறை என்பது உளவு உள்ளிட்ட தகவகல்களின் அடிப்படையில், கைது செய்யப்படக் கூடிய குற்றத்தைச் (cognizable offence) செய்தவர் என ஒருவரைக் கருதினால், முறையாக முதல் தகவல் அறிக்கை ஒன்றைப் (FIR) பதிவு செய்து, நீதிமன்றத்தில் தாக்கல் செய்து கைதுசெய்தல், தேடுதல், பொருட்களைக் கைப்பற்றுதல் முதலானவற்றைச் செய்யும் ஒரு நிறுவனம். அத்துடன் அதன் பணி முடிந்து விடுவதில்லை. நீதிமன்றத்தில் அது சேகரித்த சாட்சியங்களின் உண்மைத் தன்மையையும் அது நிறுவியாக வேண்டும்.

இந்த இரு நிறுவனங்களையும் ஒன்றாய் இணைப்பது வழக்கமல்ல என்பது மட்டுமின்றி அது நீதியுமல்ல. இன்னும் அதிகமான அரசியல் பழிவாங்கல்களுக்கும் மனித உரிமை மீறல்களுக்கும் அது வழிவகுக்கும்.

 கியூ பிரிவு போலீசும் இன்று இதே வடிவில் அமைக்கப்பட்டுள்ள தேசியப் புலானாய்வு மையமும் (NIA) இத்தகைய ஆபத்தை உள்ளடக்கியுள்ளன. உளவுத்துறையும் காவல்துறையும் ஒன்றாக இணைந்துள்ள வகையில் அரசியல் நோக்குடன் அவை செயல்படுகின்றன. இன்று இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிக அளவில் அமெரிக்கத் திரைப்படத்திற்கெதிரான முஸ்லிம் போராட்டங்கள் நடைபெறுகின்றன. இந்தத் தருணத்தில் முஸ்லிம்களை தேசத்தைக் காட்டிக் கொடுப்பவர்களாகச் சித்திரிக்கும் நோக்குடன் கியூ பிரிவு அன்சாரி விஷயத்தில் செயல்பட்டிருக்கலாம் என எண்ணவும் இடமுண்டு, தவிரவும் கூடங்குளம் போராட்டம் வலுப்பெற்றுள்ள சூழலில் தமிழகத்தின்மீது பயங்கரவாதத் தாக்குதல் என்கிற அச்சத்தைக் கிளப்பி விடுவது தமிழகத்தின் மீதான காவல் கண்காணிப்பை மிகுதிப்படுத்துவதற்கான ஒரு உளவுத்துறை உத்தியாகவும் இருக்கலாம்.

கியூ பிரிவு போலீசார் அரசியல் நோக்கில் செயல்படுவதற்கு வேறு பல எடுத்துக்காட்டுகளும் உண்டு. கோவையில் செம்மொழி மாநாடு நடைபெற்றபோது விழுப்புரம் அருகிலுள்ள சித்தணி என்னுமிடத்தில், திருச்சி செல்லும் ரயில் பாதை குண்டு வைத்துச் சேதப்படுத்தப்பட்டது. உடனடியாக கியூ பிரிவு போலீசார் அப்பகுதியைச் சேர்ந்த தமிழ்த் தேசிய அமைப்புகளில் உள்ள இளைஞர்கள் சிலரைக் கைது செய்து சட்ட விரோதக் காவலில் வைத்துத் துன்புறுத்தினர். எங்களுடைய ஆய்வில் அந்த இளைஞர்களுக்கும் குண்டு வெடிப்பிற்கும் எந்தத் தொடர்புமிலை என்பது தெரிய வந்தது. இன்றுவரை அது தொடர்பாக யாரும் கைது செய்யப்படவில்லை. செம்மொழி மாநாட்டுச் சூழலில் கவனத்தை ஈர்ப்பதற்காக இந்தக் குண்டு வெடிப்பை உளவுத் துறைகளேகூடச் செய்திருக்கலாம் என அப்போது பரவலாகப் பேசப்பட்டது. இரண்டாண்டுகளுக்குப் பின் இப்போது மீண்டும் டெசோ மாநாடு நடந்துள்ள சூழலில், அவ் வழக்கை முடிக்கும் நோக்கில் கியூ பிரிவு போலீசார் அந்த இளைஞர்களை மீண்டும் விசாரித்து மிரட்டத் தொடங்கியுள்ளனர். இப்படி நிறைய எடுத்துக்காட்டுகளைச் சொல்ல முடியும்.

 எமது கோரிக்கைகள் 

1.முதல் தகவல் அறிக்கையில் கண்டுள்ள பொய்கள் மற்றும் சட்ட விரோதக் காவல், கைது விவரங்கள் வீட்டாருக்குத் தெரிவிக்கப்பட வேண்டும் என்பது உட்பட்ட டி.கே.பாசு வழக்கில் உச்சநீதிமன்ற நெறிமுறைகள் மீறப்ப்பட்டது ஆகியன குறித்து விசாரித்து பொறுப்பான அதிகாரி தண்டிக்கப்பட வேண்டும்.

 2.‘கியூ’பிரிவு போலீசின் விசாரணை நம்பத்தகுந்ததாக இல்லை, எனவே தேசப் பாதுகாப்பு தொடர்பான இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி அல்லது சி.பி.ஐக்கு மாற்றப்பட வேண்டும்.

3. ‘கியூ’ பிரிவு போலீசிடமிருந்து காவல்துறை அதிகாரம் பறிக்கப்பட வேண்டும்.

4.அன்சாரியின் வழக்குரைஞர் கென்னடியின் வீட்டிற்கு அவர் இல்லாத நேரத்தில் சென்று உளவுத்துறையினர் மிரட்டும் நோக்கில் விசாரித்துள்ளனர். எத்தனை பெரிய குற்றமானாலும், குற்றம் சாட்டப்பட்டவருக்குச் சட்ட பூர்வமான உதவிகளைச் செய்ய வழக்குரைஞர்களுக்கு உரிமை உண்டு உயர்நீதிமன்ற மூத்த வழக்குரைஞர் சங்கரசுப்பு அவர்களின் மகன் சென்ற ஆண்டு குரூரமாகக் கொலை செய்யப்பட்டதும், அவரது குடும்பத்தினரும் சக வழக்குரைஞர்களும் காவல்துறையே இதற்குக் காரணமாக இருக்கலாம் எனக் குற்றம் சாட்டுவதும் இங்கே நினைவுக்குரியது. வழக்குரைஞரின் வீட்டாரை உளவுத்துறை மிரட்டும் நோக்கில் விசாரித்ததை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

தொடர்புக்கு: அ. மார்க்ஸ், 3/5, சாஸ்திரி நகர், 
அடையாறு, சென்னை – 600 020. செல்: 9444120582


Friday 21 September 2012

மல்லிபட்டினத்தில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டம்




     அமெரிக்க யூதன் நக்கோலா பசிலி நக்கோலா என்பவனை கைது செய்து அவன்  தயாரித்த படத்தை தடை செய்ய கோரியும் அமெரிக்க அரசுமுஸ்லிம்களிடத்தில்  மன்னிப்பு கேட்க கோரியும் இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதர்களை அழைத்து கடும் கண்டனத்தை மத்திய அரசு பதிவு செய்ய கோரியும் சென்னையிலுள்ள அமெரிக்க தூதரிடம் தமிழக அரசு தனது கடும் கண்டனத்தை பதிவு செய்ய வலியுறுத்தியும் மல்லிபட்டினம் முஸ்லிம்கள் சார்பில் 21/09/2012அன்று மல்லிபட்டினம் கடை வீதியில்  கண்டன  ஆர்பாட்டம் நடைபெற்றது.

      நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் கலந்துகொண்டு அமெரிக்கவிற்கெதிரான கோஷங்களை எழுப்பியும் ஒபாமாவின் கொடும்பாவியை எரித்தும் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Friday 14 September 2012

ராஜினாமா அறிவிப்பு





Wednesday 12 September 2012

அசாம் கலவரம்: ஆர்.எஸ்.எஸ் சொல்லும் வங்கதேச ஊடுருவல் உண்மையா?


சாமியர்களைக் காப்பாற்று.பாரதக் குடிமக்களாகிய போடோக்களைக் காப்பாற்று. வங்கதேச ஊடுருவல்காரர்களை வெளியேற்று. அசாமியர்களின் நிலங்களையும் தொழில்களையும் ஆக்கிரமித்துவருகின்ற வங்கதேச முஸ்லீம்களை வெளியேற்று”
மேற்கண்ட முழக்கங்களோடு ஆர்பாட்டம் ஒன்றை ஆகஸ்ட் 21ம் தேதியன்று விஷ்வ ஹிந்து பரிசத் என்கிற சங்கப்பரிவார அமைப்பு நடத்தியுள்ளது. இந்த ஆர்பாட்டத்திற்கு ‘தேசபக்தர்களை’ அணிதிரளக் கோரி ஒரு துண்டறிக்கையையும் அவர்கள் வெளியிட்டுள்ளார்கள். மேற்படி துண்டறிக்கையில், “பங்களா தேசத்தவர்கள் முறையான அனுமதிப் பத்திரம் இன்றி பாகிஸ்தானுக்குள் நுழைய முடியுமா?” என்றும், “பாகிஸ்தானியர்கள் முறையான அனுமதிப் பத்திரம் இன்றி சௌதி அரேபியாவுக்குள் நுழைய முடியுமா?” என்றும் கேள்வி  எழுப்பப்பட்டுள்ளது. மேலும், நமது நாட்டில் 3 கோடி வங்க தேசத்தவர்கள் சட்டவிரோதமாக குடியேறியுள்ளாதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
ஆர்.எஸ்.எஸ் டவுசர்கள் அடித்துள்ள நோட்டீஸின் சாராம்சம் இது தான் – வங்கதேசத்திலிருந்து முசுலீம்கள் கள்ளத்தனமாக ‘பாரத’ தேசத்திற்குள் நுழைகிறார்கள்; இது சட்டவிரோதமானது. மேலும், இந்த வந்தேறிகளின் மூலம் வடகிழக்கு மாநிலங்களை முசுலீம்கள் ஆக்கிரமிக்கப் பார்க்கிறார்கள் என்பதும் ஆகும். இவை எப்பேர்பட்ட பொய்கள் என்பதைப் புரிந்து கொள்ள சில வரலாற்று பின்னணிகளையும் புள்ளிவிவரங்களையும் நாம் அறிந்து கொள்வது அவசியமாகும்.

Table 1
Percentage Decadal Variation in Population since 1951 in India and Assam
1951-61
1961-71
1971-81
1971-91
1991-01
01-2011
India
21.64
24.80
24.66
54.41
21.54
17.64
Assam
34.98
34.95
-
53.26
18.92
16.93
Dhubri
43.74
43.26
-
45.65
22.97
24.40
Dhemaji
75.21
103.42
-
107.50
19.45
20.30
Karbi Anglong
79.21
68.28
-
74.72
22.72
18.69

மேலே உள்ள புள்ளிவிவரத்தை கவனமாகப் பரிசீலித்தால் நமக்கு சில விஷயங்கள் தெளிவடையும். இந்தப்  பட்டியலில், ஒவ்வொரு பத்தாண்டுகளில் அனைத்திந்திய அளவில் மக்கள் தொகை வளர்ச்சி சதவீதம், அசாமின் மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் மற்றும் அதன் சில மாவட்டங்களில் வளர்ச்சி விகிதங்கள் வழங்கப்பட்டுள்ளது. தற்போது கலவரம் நடந்து வரும் கோக்ரஜ்ஹர் மாவட்டத்தை ஒட்டி அமைந்திருக்கும் துப்ரி மாவட்டம் தான் பங்களாதேசத்தின் எல்லைப்புறத்தில் அமைந்துள்ளது. இம்மாவட்டத்தில் தான் வங்க மொழி பேசும் முசுலீம்களின் மக்கள் தொகை அதிகளவில் உள்ளது.
பட்டியலின் படி பார்த்தால், 1971-ம் ஆண்டுக்குப் பிறகு துப்ரி மாவட்டத்தின் மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் விழுந்துள்ளது ( அதாவது, முசுலீம்களின் வளர்ச்சி விகிதம்) அதற்கு முன்பும், துப்ரி மாவட்டத்தில் மக்கள் தொகை வளர்ச்சி அதிகமாக இருந்த காலத்திலேயே அசாமின் பிற மாவட்டங்களில் ‘இந்துக்களின்’ மக்கள் தொகை மிக அதிகளவிலான வளர்ச்சி நிலையில் இருந்துள்ளது. குறிப்பாக தெமாஜி மற்றும் கார்பி மாவட்டங்களின் வளர்ச்சியை துப்ரி மாவட்டத்தோடு ஒப்பிட்டுப் புரிந்து கொள்ள முடியும்.
அதே போல், இப்போது கலவரம் நடக்கும் கோக்ரஜ்ஹர் மாவட்டத்தை எடுத்துக் கொண்டால் 2001 – 2011 காலகட்டத்தில் அதன் மக்கள் தொகை வளர்ச்சியே 5.19 சதவீதத்திற்கு வீழ்ந்துள்ளது. மக்கள் தொகை அடர்த்தியும் மிகக் குறைவான அளவான 280 பேராக (சதுர கிலோமீட்டருக்கு) உள்ளது. மேலும் மக்கள் இம்மாவட்ட மக்கள் தொகையில் 20% அளவுக்கே முசுலீம்கள் உள்ளனர். இந்த விவரங்களில் இருந்தே முசுலீம்களால் பிரதேச அளவில் பெரியளவில் நெருக்கடி ஏதுமில்லை என்பதை விளங்கிக் கொள்ளலாம்.
ஆக, வங்கமொழி பேசும் முசுலீம்கள் பங்களாதேசத்திலிருந்து ஊடுருவி அசாமிய நிலங்களை அக்கிரமிக்கிறார்கள் என்று ஆர்.எஸ்.எஸ் கும்பல் சொல்வது பச்சைப் பொய். ஆனால், அசாம் மாநிலத்தில் – குறிப்பாக துப்ரி மாவட்டத்தில் – வங்க மொழி பேசும் முசுலீம்கள் மக்கள் தொகை சதவீதத்தில் அதிகளவில் இருப்பதற்குக் காரணம் என்ன?
1826-ம் ஆண்டுக்கு முன்பு அசாம் இந்தியாவின் ஒரு பகுதியாகவே இல்லை. அது அப்போது மூன்றாம் பர்மிய சாம்ராச்சியத்தின் மேற்குப் பகுதி எல்லைப்புற பிரதேசமாக இருந்தது. 1800களின் துவக்கத்தில் நடந்த ஆங்கிலோ – பர்மிய யுத்தத்தில் தோல்வியுறும் பர்மாவின் ஏவா அரசு ஆங்கிலேயருடன் ஒரு ஒப்பந்தத்தைக் கையெழுத்திடுகிறது – அது யெந்தபோ ஒப்பந்தம் என்று அழைக்கப்படுகிறது. அதன் படி, பர்மா காலனிய இந்தியாவிடம் விட்டுக் கொடுத்த நிலப்பகுதி தான் அசாம். அதாகப்பட்டது, பாரதமாதாவின் பீச்சாங்கையாக விளங்கும் நிலப்பகுதியே வேறு ஒரு நாட்டிடம் இருந்து அடித்துப் பறித்து ஒட்டவைக்கப்பட்டது தான்.
அதே காலகட்டத்தில் வெள்ளையர்கள் வங்காளப் பகுதியில் அமுல்படுத்திய விவசாயக் கொள்கைகளும், பொருளாதாரக் கொள்கைகளும் விவசாயிகளையும் கைவினைஞர்களையும் ஓட்டாண்டிகளாக்குகிறது. பெருந்திரளான மக்கள் வெள்ளை அரசாங்கம் அறிமுகப்படுத்திய ஜமீந்தாரி முறையின் கீழ் அல்லலுற்று வந்தனர். அதே நேரம் வெள்ளையர்கள் புதிதாக ஆக்கிரமித்துக் கொண்ட பகுதியில் நிறைய நிலங்கள் இருந்தன – ஆனால், அவற்றின் மூலம் நிலவருவாய் ஏதும் கிடைக்காத நிலையில் அவர்களே வங்கத்தின் கிழக்குப் பகுதி மக்களை புதிய நிலப்பகுதியில் குடியேற ஊக்குவித்துள்ளனர். அப்படிக் குடியேறியவர்கள் அசாமியப்பகுதியில் நிலங்களைப் பண்படுத்தி விவசாயம் செய்யத் துவங்குகிறார்கள்.
இப்படி புதிதாக குடியேறும் வங்காளிகளின் எண்ணிக்கை ஒரு கட்டத்தில் அதிகரித்துச் சென்ற நிலையில், 1920-ம் ஆண்டு வாக்கில் வங்க விவசாயிகளின் இடப்பெயர்ச்சிக்கு கட்டுப்பாடுகளை விதிக்கிறார்கள். ஆனால், அதற்குள் கோல்பாரா, நாகாவ்ன், காமரூப் போன்ற மாவட்டங்களின் முசுலீம்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இப்படி ஒன்றுபட்ட இந்தியாவின் ஒரு மாநிலத்திலிருந்து இன்னொரு மாநிலத்துக்கு அரசின் அலட்சியமான பொருளாதாரக் கொள்கைகளின் விளைவாய் இடம்பெயர்ந்தவர்களைத் தான் இன்று ஆர்.எஸ்.எஸ் கும்பல் ‘சட்டவிரோதமாக’ குடியேறியவர்கள் என்று தூற்றுகிறது.
இத்தனைக்கும் இவர்கள் தேசப் பிரிவினையின் போது தாங்கள் குடியேறிய மண்ணுக்கு விசுவாசமாக இந்த நாட்டையே நம்பி இதன் இறையாண்மையையே ஏற்றுக் கொண்டு இங்கே தங்கி விட்டவர்கள். அவர்கள் அசாமின் மொழி கலாச்சாரத்தை தமக்குள் வரித்தும் கொண்டனர். உதாரணமாக, துப்ரி மாவட்டத்தில் முசுலீம்களின் மக்கள் தொகை சதவீதம் 74.29% அங்கே அசாம் மொழி பேசுபவர்கள் 70.09%. முசுலீம்கள் என்றாலே அவர்கள் நமது நாட்டின் மீது விசுவாசம் அற்றவர்களென்றும் அவர்கள் பிற மொழிகளை ஏற்றுக் கொள்ளமாட்டார்களென்றும் ஆர்.எஸ்.எஸ் காக்கி டவுசர்கள் வழக்கமாக அவிழ்த்து விடும் பொய்களின் மேல் வங்காளதேச முசுலீம்கள் காறித் துப்பியிருக்கிறார்கள். பிறகு ஏன் இந்தக் கலவரங்கள்?
அசாம்-கலவரம்-1இன்றைக்கு அசாமில் நடந்து வரும் கலவரங்களுக்கு சிக்கலான வரலாற்றுப் பின்னணி உள்ளது. இன்றைக்கு போடோக்களின் தரப்பாகவும் பார்ப்பன இந்து தேசியத்தின் தரப்பாகவும் முன்வைக்கப்படும் ‘வங்காளதேச முசுலீம் ஊடுருவல்காரர்களின்’ ஆக்கிரமிப்புகள்  உண்டாக்கும் சமூக பொருளாதார நெருக்கடி என்பது முதன் முதலில் ‘அந்நியர்களுக்கு’ எதிரானதாகத் தான் துவங்கியது. அசாமியர்களோடு முதலில் முரண்பட்டது வங்கதேச முசுலீம்கள் அல்ல வங்காள மொழி பேசும் இந்துக்கள் தாம்.
போலி சுந்தந்திரத்திற்குப் பின் அசாமின் உள்ளூர் அரசியலைத் தீர்மானிக்கும் சக்தியாக விளங்கியது அசாமியர்கள் தான். அதே போல, ‘சுதந்திரத்தின்’ மூலம் கிடைத்து வந்த பலன்களை பெருமளவில் அனுபவித்து வந்ததும் நடுத்தர வர்க்க அசாமியர்கள் தான். அரசு வேலைகளிலும் மற்ற பிற சலுகைகளிலும் அசாமிய நடுத்தர வர்க்கத்துக்குப் போட்டியாக வங்க மொழி பேசும் இந்துக்கள் எழுகிறார்கள். அசாமியர்களும் வங்காளிகளுக்கும் இடையிலான முதல் கலவரம் 1960-ல் நடக்கிறது – அது இரண்டு மொழி பேசும் ‘இந்துக்களுக்கு’ இடையில் நடந்த கலவரம்.
அனைத்து அசாம் மாணவர்கள் சங்கம் (All Assam Students Union/ AASU) ஆரம்பத்தில் நடத்திய ‘அசாம் இயக்கம்’ அதன் துவக்கத்தில் வங்காளதேச முசுலீம் ‘ஊடுருவல்காரர்களுக்கு’ எதிராக நடத்தப்பட்டதல்ல – அது அந்நியர்களுக்கு எதிரான இயக்கம் என்றே சொல்லப்பட்டது. அதற்கு, உள்ளூர் அளவிலான அதிராக வர்க்கத்தின் ஆதரவும் இருந்தது.
இதற்கிடையே எழுபதுகளில் இடதுசாரிகள் அசாமில் ஓரளவுக்கு செல்வாக்குப் பெறுகிறார்கள். 1974-ல் நடந்த கவுஹாத்தி முனிசிபல் தேர்தலில் முதன்முதலாக இடதுசாரிகள் வெற்றி பெருகிறார்கள். வங்கதேசத்திலிருந்து இடம் பெயர்ந்து வந்த முசுலீம்கள் மட்டுமின்றி வங்கமொழி பேசும் இந்துக்கள் மற்றும் பல்வேறு பழங்குடியினரின் ஆதரவையும் இடதுசாரிகள் பெற்றிருந்தனர். அந்த சமயத்தில் எழுந்து வந்த இனவாதிகளுக்கு இப்போது ஒரு நெருக்கடி உண்டாகிறது; அதாவது, உள்ளூர் பழங்குடியினரையோ அல்லது மாநிலத்துக்கு வெளியே – குறிப்பாக தில்லியில் – அரசியல் செல்வாக்குடன் திகழும் பிரிவினரையோ தமது வெறுப்புப் பிரச்சாரத்தின் இலக்காக வைத்திருப்பது ஆபத்துக்குரியதானது.
இந்த கட்டத்தில் தான் ‘அந்நியர்களுக்கு எதிராக’ என்பது ‘வங்கதேச முசுலீம் ஊடுருவல்காரர்களுக்கு எதிராக’ என்று மாறுகிறது. இதன் தொடர்ச்சியாகத் நடந்த கலவரங்களில் ஆயிரக்கணக்கான முசுலீம்கள் அநியாயமாகக் கொல்லப்படுகிறார்கள். பிரிக்கப்படாத நாகோன் மாவட்டத்தில் 1983 பிப்ரவரி 13ம் தேதி நிகழ்ந்த நெல்லீய் படுகொலையில் மட்டும்  சுமார் 2,000 முசுலீம்கள் படுகொலை செய்யப்பட்டனர். இதில் பெருமளவு குழந்தைகளும் பெண்களுமே இருந்தனர்.
1979 துவங்கி 1985 வரை அசாமிய இனவாதிகள் நடத்திய படுகொலைகள் இன்றும் ஆறாத ரணமாய் இருக்கிறது. வடகிழக்கில் உள்ளூர் அளவில் பல்வேறு இனக்குழுக்களைச் சேர்ந்த மக்களிடம் ஒரு ஐக்கியம் ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் இந்திய ஆளும் வர்க்கம் மிகத் தெளிவாகவே இருந்துள்ளது. போடோ, குக்கி, மிசோ நாகா என்று வடகிழக்குப் பிராந்தியத்தில் உள்ள பல்வேறு இனக்குழுக்களுக்கு இடையே தீராத இனக்கலவரங்களை மூட்டி விட்டது இந்திய ஆளும் வர்க்கம் தான்.
போடோக்கள் மற்றும் அசாமியர்களின் தொடர்தாக்குதலுக்குள்ளான முசுலீம்கள், தம்மைக் காப்பாற்றிக் கொள்ள இரண்டாயிரங்களில் பத்ருதீன் அஜ்மால் என்பவரால் துவங்கப்பட்ட அனைத்திந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணியின் கீழ் அணிதிரளத் துவங்குகிறார்கள். வாசனைத் திரவியங்கள் தயாரித்து விற்கும் தொழிலில் கொடிகட்டிப் பறக்கும் பெருமுதலாளியான பத்ருத்தீன் அஜ்மால் தியோபந்த் எனும் அடிப்படைவாத இசுலாமியப் பிரிவைச் சேர்ந்தவர்.
இரண்டாயிரங்களின் மத்தியில் அவ்வளவாகச் செல்லாக்கு இல்லாமலிருந்த இவரது கட்சி தற்போது 18 எம்.எல்.ஏக்களுடன் முக்கியமான எதிர்கட்சி எனும் அந்தஸ்திற்கு வளர்ந்துள்ளது. காங்கிரசு மற்றும் பாரதியஜனதாவின் இந்துத்துவ வெறிக்கு பதிலடியாகத் துவங்கப்பட்ட இந்த அமைப்பும் இசுலாமியர்களை ஒரு முக்கியமான ஓட்டுவங்கியாக அணிதிரட்டியுள்ளது. தற்போது நடந்து வரும் கலவரங்கள் இந்த அணிசேர்க்கையை மேலும் உறுதிப்படுத்துவதோடு மக்களைக் கூர்மையாகப் பிளந்து எதிரெதிர் முகாம்களாக நிறுத்தியுள்ளது.
சுமார் நூறைம்பது ஆண்டுகளுக்கு முன் வெள்ளையர் காலத்தில் அசாமில் குடியேறிய வங்காளிகளின் நிலைமை என்பது இலங்கையின் மலையகத் தமிழர்கள் மற்றும் மலேசியத் தமிழர்களின் நிலைமையை ஒட்டியது தான். சிங்கள இனவாத பாசிஸ்டுகள் மலையகத் தமிழர்களை வெளியேற்ற வேண்டும் என்று சொல்வதும் ஆர்.எஸ்.எஸ் காட்டுமிராண்டிகள் வங்காளி முசுலீம்களை வெளியேற்ற வேண்டும் என்று சொல்வது ஏறக்குறைய ஒன்று தான்.
மட்டுமல்லாமல் அசாமிய தேசிய இனத்தைக் காக்க வேண்டும் என்பது ஆர்.எஸ்.எஸின் நோக்கமன்று – இந்த பிரச்சினையை வைத்துக் கொண்டு அகில இந்திய அளவில் இந்துக்களிடையே பதற்றத்தை உண்டாக்கி முசுலீம்களை அந்நியப்படுத்துவதும், வடகிழக்கில் ஓட்டுக்களை அள்ளுவதும் தான் உண்மையான நோக்கம். அகில இந்திய அளவில் இந்துக்களை பாசிச செயல்திட்டத்தின் கீழ் அணிதிரட்ட இவர்கள் பிரதேச அளவிலான உத்திகளைக் கையாள்கிறார்கள். உதாரணமாக, கருநாடகத்தில் கன்னடப் பெருமிதம், குஜராத்தி அஸ்மிதா, மராத்தி மானூஸ் போல அந்தந்த பிரதேசங்களில் உள்ள பிற்போக்கு நிலபிரபுத்துவ ஆதிக்கக் கருத்தியலை தங்கள் முகமூடியாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.
இவ்வாறு தயார்படுத்தப்படும் இந்துத்துவ இயக்கங்களின் தொண்டர்களோ மூளையற்ற வெற்று மண்டையோடுகளோடு தான் அலைகிறார்கள் என்பது சமீபத்தில் நிரூபணமானது. கடந்த 30ம் தேதி பெங்களூருவில் இருந்து மங்களூருக்கு ரெயிலில் சென்று கொண்டிருந்த வட இந்தியத் தொழிலாளர்களை மாண்டியாவில் தடுத்து நிறுத்திய ஏ.பி.வி.பி எனும் சங்கப்பரிவார அமைப்பின் குண்டர்கள், அதில் 89 தொழிலாளர்களை வெளியே இழுத்துப் போட்டு ‘வங்கதேசத்திலிருந்து ஊடுருவிய தீவிரவாதிகள் இவர்கள்’ என்று கூச்சலிட்டபடியே அடித்துள்ளனர். இந்தத் தொழிலாளர்களில் பலர் ராஜஸ்தான், உ.பி, பீகார், ஒரிசா மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் தாம் – அதிலும் பலர் ‘இந்துக்கள்’.
இந்து பாசிசம் பொய்களையும் வதந்திகளையும் செயல்தந்திரமாகக் கொண்டு வளர்ந்து வருகிறது. இது இசுலாமியர்களுக்கு மட்டுமல்ல – அனைத்து உழைக்கும் மக்களுக்குமே எதிரானது என்பதை நாம் உணர்ந்து கொள்ளும் போது தான் அவர்களைக் களத்தில் வீழ்த்த முடியும்.
தகவல் மூலங்கள் – கஃபிலா, அவுட்லுக் மற்றும் ஹிந்து நாளிதழ்